இந்திய கடற்படையின் நடவடிக்கையை கண்டு உலகநாடுகள் வியப்பு
ஏப்ரல்:07-ஏமனில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. அங்கு இந்தியா உள்பட பல்வேறு வெளிநாட்டினர் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே அவர்களை பத்திரமாக மீட்கும் பணிகளில் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.உள்நாட்டுப்போரால் பாதிக்கப்பட்டு உள்ள ஏமனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. ‘ஆபரேசன் ரஹத்’ என்று பெயரில் இந்திய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த மீட்பு நடவடிக்கை கடந்த 30-ஆம் தேதி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக ஐ.என்.எஸ். போர்க்கப்பல் ஏடன் துறைமுகத்துக்கு அருகே கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு உள்ளது. அங்கு தீவிரமாக போர் நடந்து வருவதால், துறைமுகத்துக்குள் செல்ல கப்பலுக்கு அனுமதி கிடைக்கவில்லை.இதனால் ஏமனின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள் படகுகள் மற்றும் சிறிய ரக விமானங்கள் மூலம், துறைமுகத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தூரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்னர் அந்த கப்பலில் ஜிபோட்டி நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதன்பிறகு அங்கிருந்து விமானப்படை விமானங்கள் மூலம் மும்பை, கொச்சி போன்ற நகரங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். நேற்று மட்டும் 1000-த்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். இதுவரையில் கடல் வழி மற்றும் வான்வழியாக 3,300 இந்தியர்கள் வரையில் மீட்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 4 ஆயிரம் இந்தியர்கள் ஏமன் நாட்டில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள். மேலும் இந்தியர்களை மீட்கும் போது, அவர்களுடன் பணியாற்றும் வெளிநாட்டினரையும் மனிதாபிமான அடிப்படையில் இந்திய அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். அதன்படி வங்காளதேசம், நேபாளம், பாகிஸ்தான், உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200க்கு அதிகமான பேரையும் இந்திய அதிகாரிகள் மீட்டனர்.இந்நிலையில் ஏமனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையின் நடவடிக்கையை கண்டு உலகநாடுகள் வியந்து உள்ளன. 26 நாடுகள் தங்கள் நாட்டவர்களையும் ஏமனில் இருந்து மீட்பதற்கு உதவிசெய்ய வேண்டும் என்று இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளன. இதற்கிடையே ஏமனில் சிக்கி தவிக்கும் தங்கள் நாட்டவர்களை மீட்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று 26 நாடுகள் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்து உள்ளது. பக்ரைன், வங்காளதேசம், கியூபா, செக் குடியரசு, எகிப்து, ஜிபோட்டி, பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்காரி, ஈராக், இந்தோனேசியா, அயர்லாந்து, லெபனான், மலேசியா, மாலத்தீவு, நேபாளம், நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, சுலவேனியா, இலங்கை, சிங்கப்பூர், சுவேடன், தாய்லாந்து, துருக்கி மற்றும் அமெரிக்கா கோரிக்கை விடுத்து உள்ளது என்று சையது அக்பரூதீன் டுவிட்டரில் செய்தி வெளியிட்டு உள்ளார்.