கூடுதல் பயணிகளுக்கு சவுதி அரசு மறுப்பு
ஏப்ரல்:08-ஹஜ்’ பயணத்துக்காக உலகில் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்கள் சவுதி அரேபியா நாட்டுக்கு செல்கின்றனர். அந்தவகையில் இந்தியாவில் இருந்து எத்தனை பேர் வரவேண்டும் என்று அறிவித்த பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், மும்பையில் உள்ள அகில இந்திய ஹஜ் கமிட்டியும் சேர்ந்து மாநில வாரியாக பிரித்து அனுப்புகிறது.கடந்த 2013–ம் ஆண்டு 1 லட்சத்து 70 ஆயிரத்து 25 பேர் சென்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 1 லட்சத்து 36 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ‘ஹஜ்’ பயணிகளின் விருப்பப்படி 1 லட்சத்து 41 ஆயிரத்து 790 பேர் என்ற எண்ணிக்கையில் அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சவுதி அரேபியா அரசுக்கு கோரிக்கை விடுத்தது.ஆனால் சவுதி அரேபியா அரசு இதனை ஏற்கவில்லை. கடந்த ஆண்டை போல் 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் மட்டுமே வரமுடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.இந்தியாவில் இருந்து ‘ஹஜ்’ பயணம் செல்வதற்கு முன்பாக சவுதி அரேபியா நாடு பயணிகளின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக ஆயிரம் முஸ்லிம்களுக்கு ஒருவர் என்ற விதியை கடைப்பிடித்து வந்தது. ஆனால் தற்போது ‘மெக்கா’ பள்ளிவாசல் விரிவாக்கத்துக்காக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.இந்தப்பணி 2020–ம் ஆண்டு வரை நடக்கிறது. கட்டுமானத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் எண்ணிக்கையை 2020–ம் ஆண்டு வரை 20 சதவீதம் குறைத்துள்ளது. அன்படி இந்தியாவில் இருந்து செல்பவர்களில் 34 ஆயிரம் பேர் குறைக்கப்பட்டு உள்ளனர். தற்போது ‘ஹஜ்’ காலங்களில் 30 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை 2020–ம் ஆண்டு 1 கோடியாக உயர்த்த சவுதிஅரேபியா நாடு முடிவெடுத்துள்ளது.நடப்பாண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் செல்ல உள்ளனர். இதில் அரசு சார்பில் 1 லட்சத்து 5 ஆயிரம் பேரும், டிராவல்ஸ் நிறுவனங்கள் சார்பில் 31 ஆயிரம் உட்பட 1 லட்சத்து 36 ஆயிரம் பேர் செல்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்து 660 பேர் செல்ல உள்ளனர். இவர்களில் ஆண்கள், பெண்கள் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து முதல் விமானம் ஆகஸ்டு 17–ந்தேதி புறப்படுகிறது.300 பயணிகளுக்கு சேவை செய்வதற்காக 1 தொண்டர் மூலம் 2 ஆயிரத்து 660 பேருக்கு 9 தொண்டர்கள் பயணிகளுடன் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர். இந்த தொண்டர்களுக்கான செலவை ரூ.18 லட்சத்தை அரசு ஏற்கிறது என்று தமிழ்நாடு ‘ஹஜ்’ சர்வீஸ் சொசைட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment