தஞ்சைக்கு வந்த ரெயிலில் அனாதையாக கிடந்த பெட்டியால் பீதி
ஏப்ரல்:05-புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ‘புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மதியம் 12 மணியளவில் புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டு வடமாநிலங்கள் மற்றும் சென்னை, விழுப்புரம் வழியாக மறுநாள்(அதாவது சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் தஞ்சை ரெயில் நிலையத்தை வந்தடையும். பின்னர் தஞ்சையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம்.வழக்கம்போல் நேற்றுமுன்தினம்(வெள்ளிக்கிழமை) புவனேஸ்வரில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் நேற்று காலையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ரெயில் அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரெயிலின் எஸ்-5 கோச்சில் இருந்த பயணிகள் அலறி அடித்து அங்கும் இங்குமாக ஓடினர்.அப்போது ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எஸ்-5 கோச்சிற்கு சென்று பார்த்தனர். அங்கு அனாதையாக ஒரு பெட்டி கிடந்தது. மர்மமான முறையில் கிடந்த அந்த பெட்டியால் பயணிகளிடையே வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் தஞ்சை ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.நேற்று மதியம் 4 மணியளவில் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் தஞ்சை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனே போலீசார் எஸ்-5 கோச்சிற்கு சென்று அந்த பெட்டியை கைப்பற்றினர். பின்னர் பெட்டியை வெளியே எடுத்து வந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர்.மோப்ப நாய் கொண்டும் சோதனை செய்யப்பட்டது. அப்போது பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் பெட்டியை திறந்து பார்த்தனர்.அதில் துணிகளும், சென்னையை சேர்ந்த பப்பு பட்நாயக் என்ற முகவரியுடன் ஒரு அட்டையும் இருந்தது. இதனால் வெடிகுண்டு பீதி விலகி பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இதையடுத்து ரெயில் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் தஞ்சை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment